பாடாலூர், பிப். 7: ஆலத்தூர் தாலுகா மருதடியில் இருந்து சிறுவாச்சூர் செல்லும் சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளதால் விரைந்து சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆலத்தூர் தாலுகா மருதடி கிராமத்தில் இருந்து சிறுவாச்சூர் கிராமத்துக்கு செல்லும் சாலை ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது. சிறுவாச்சூரில் புகழ்பெற்ற மதுரகாளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு மருதடி, ஈச்சங்காடு, நாட்டார்மங்கலம், கூத்தனூர், செட்டிகுளம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இந்த சாலை வழியாக தான் கோயிலுக்கு நடந்தும், இருசக்கர வாகனங்களிலும் செல்வர்.
மேலும் இந்த சாலையில் உள்ள விவசாய நிலங்களுக்கு தேவையான உரம், விதை உள்ளிட்ட பொருட்களையும், விவசாய நிலங்களில் விளையும் மக்காச்சோளம், பருத்தி வெங்காயம், நிலக்கடலை, மிளகாய், கம்பு, சோளம் உள்ளிட்ட விளை பொருள்களையும் இந்த சாலை வழியாக தான் விவசாயிகள் எடுத்து செல்ல வேண்டியுள்ளது. மருதடி, ஈச்சங்காடு பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவர்கள்,சைக்கிளில் சிறுவாச்சூரில் உள்ள அரசு பள்ளிக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் இந்த சாலை குண்டும், குழியுமாக ஜல்லிக்கற்கள் பெயர்ந்துள்ளதால் விவசாயிகள், பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே மருதடி- சிறுவாச்சூர் சாலையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.